தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் பொக்லைன் எந்திர டிரைவரான ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய மதியரசு என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கடத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி அருகில் இருக்கும் தொடக்கப் பள்ளிக்கு விளையாட சென்ற சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் நேரில் சென்று பார்வையிட்ட போது சிறுவனின் கழுத்தில் காயம் இருந்தது. சிறுவனை மர்ம நபர்கள் கொலை செய்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் உடலை வீசி சென்றுள்ளனர். பின்னர் போலீசார் சிறுவனை உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.