உலகக்கோப்பை வில்வித்தை(நிலை 2) போட்டியானது சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, தென் கொரியாவின் கிம் ஜோங்ஹோ- ஓ யோயூன் இணையை எதிர் கொண்டது.

மும்முரமான இப்போட்டியில் ஓஜஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி 156-155 எனும் புள்ளிக்கணக்கில் தென்கொரிய இணையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. சென்ற மாதம் துருக்கியில் நடைபெற்ற உலகக்கோப்பை (நிலை 1) போட்டியிலும் இந்திய இணை தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரதமேஷ் ஜவகர் 149-148 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நெதர்லாந்தின் மைக் கிளாசருக்கு அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 19 வயதுள்ள பிரதமேஷ் ஜவகர் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் பதக்கம் இது.