மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் பால்கர் அருகே மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரியில் இருந்த நூற்றுக்கணக்கான மாம்பழங்கள் சாலை முழுவதும் சிதறிப் பரவின. விபத்து நடந்தவுடன் ஓட்டுநருக்கு முதலுதவி செய்து காப்பாற்ற முன்வருவதே ஒரு நாகரிக சமூகத்தின் கடமையாகும்.

ஆனால், அங்கு கூடியிருந்த உள்ளூர் மக்கள் விபத்தில் சிக்கிய ஓட்டுநரைப் பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல், சாலையில் சிதறிக் கிடந்த மாம்பழங்களை போட்டி போட்டுக்கொண்டு திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

மேலும் சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த காணொளியில், மக்கள் பைகள் மற்றும் கூடைகளுடன் வந்து மாம்பழங்களை அள்ளிச் செல்வதைக் காண முடிகிறது. காயமடைந்த ஓட்டுநர் ரத்தக் காயங்களுடன் உதவியற்ற நிலையில் இருக்க, மனிதாபிமானத்தை விட மாம்பழங்களே முக்கியம் என மக்கள் செயல்பட்ட விதம் சமூக ஆர்வலர்களிடையே கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இக்கட்டான சூழலில் ஒருவருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவரது இழப்பை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது மனிதநேயத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.