செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலரிடம் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இதனையடுத்து சுப்பிரமணி சமூக நல அலுவலரை நேரில் சந்தித்து விண்ணப்ப நிலை குறித்து கேட்டபோது அதிகாரி கஸ்தூரி என்பவர் 2000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

அதற்கு சுப்பிரமணி 1,800 ரூபாய் தருகிறேன் என கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து சுப்பிரமணி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி சுப்பிரமணி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கஸ்தூரியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் போலீசார் கஸ்தூரியை கையும் களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.