நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்திநகர் பகுதியில் இன்று (07.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் திருமதி. ராதா(வயது 38) திருமதி. பாக்கியம்(வயது36), திருமதி. முத்துலட்சுமி(வயது 36), திருமதி. உமா(வயது 35), திருமதி சங்கீதா(வயது 30) மற்றும் திருமதி. சகிலா (வயது 30 ) ஆகிய 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திருமதி. ஜெயந்தி (வயது 56), திருமதி.சாந்தி (வயது 45), திரு.தாமஸ் (வயது 24) மற்றும் திரு மகேஸ் (வயது 23) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.