தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு மராட்டிய மாநில நில வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னார் பகுதியில் நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு சொந்தமான ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது.

இந்த நிலத்திற்கு ஒரு வருடமாக ஐஸ்வர்யா ராய் வரி செலுத்தவில்லை. இந்த நிலத்துக்கு ஐஸ்வர்யா ராய் ரூ. 21,960 வரி செலுத்த வேண்டும். இந்த வரியை செலுத்துமாறு ஐஸ்வர்யா ராய்-க்கு பலமுறை வருவாய்த்துறை நினைவு படுத்தியும் இதுவரை வரி செலுத்தவில்லை. இதன் காரணமாகத்தான் தற்போது வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் ஐஸ்வர்யா ராய் நிலவரி செலுத்தாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று 1200 பேருக்கு நிலவரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.