தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். “நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் நீங்கள் கொடுத்த ஆதரவுதான்; ஒரு முதலமைச்சராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் எனக்கு அடையாளம் கொடுத்தவர்கள் எடப்பாடி மக்களாகிய நீங்கள்தான்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

​தொடர்ந்து பேசிய அவர், “நான் உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கிறேன். மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுத்தால், உங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன்” என்று கூறியபோது அங்கிருந்த அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சேவைகளை நினைவுகூர்ந்த அவர், அத்தனை மக்களையும் பாதம் தொட்டு வணங்குவதாகக் கூறி உருக்கமாக உரையாற்றினார். சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி கண் கலங்கியபடி பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.