மேற்கு ஆசியாவில் தற்போது பெரும் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் ஈரான் மக்களுக்கு உதவுவதற்காக காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் சேர்ந்து தற்போது ஒரு புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இதற்காக ஒரு கோழி முட்டை 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அதாவது ஒரு முட்டையின் விலை வெறும் பத்து ரூபாய் தான். இருப்பினும் ஈரான் மக்களுக்கு உதவி செய்வதற்காக இப்படி பெரும் தொகைக்கு ஏலம் விட்டு அதனை அந்த மக்களுக்கு நன்கொடையாக கொடுக்கிறார்கள். இந்த முட்டையை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கிய அப்பகுதியை சேர்ந்த சபீர் ஹூசைன் கூறும்போது, என்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக பத்து ரூபாய் முட்டையை 25,000 ரூபாய்க்கு நான் வாங்கவில்லை.

ஈரான் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அப்படி வாங்கினேன் என்றார். அதோடு நாங்கள் எங்களுடைய உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். இந்த மக்களுக்கு உதவுவதற்காக தான் நாங்கள் வாழவே செய்கிறோம் என்றும் கூறினார். மேலும் சமீபத்தில் லடாக்கை சேர்ந்த சாபி கிராமத்தில் வசிக்கும் வியாத் அலி என்பவர் விலை உயர்ந்த காரை ஈரான் மக்களுக்காக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முன்னதாக காஷ்மீர் மக்களும் விலை உயர்ந்த செப்பு பாத்திரங்கள் ஆபரண தங்கங்கள் உண்டியல்கள் மற்றும் பணம் போன்றவற்றை ஈரான் மக்களுக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில் அதற்காக ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.