சென்னையில் உள்ள  எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர்  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திராவிட பாலு என்பவர் வசித்து வந்தார். தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆகவும் கன்னிகைபேர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இவருடைய மனைவி செல்வி (55). இவருடைய மகன் முருகன் (42), மருமகள் ரம்யா (32), முருகனின் மகன் கருணாநிதி (15).

இவர்களுக்கும் திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலுவுக்கும் சில காலங்களாக நிலம் பாகப்பிரிவினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சத்திய வேலுவின் மகன் பவுன் குமார் என்ற விஷால் அருகே கிடந்த கம்பியை எடுத்து திராவிட பாலு குடும்பத்தை சேர்ந்த செல்வி, முருகன், ரம்யா மற்றும் கருணாநிதி ஆகியோரை தாக்கி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் இதில் ரம்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்த செல்வி, முருகன், கருணாநிதி போன்றோருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய  விஷாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.