காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் விஜயராகவன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வத்சலா(36) மனைவியும், விஷ்ணு(9) அதீர்த்(6) என்ற 2 மகன்களும் இருந்துள்ளனர். இவர்களுடன் விஜயராகவனின் தாய் வசந்த லட்சுமியும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயராகவன் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாயுடன் கேரளாவில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அவர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் பாளையம் மஞ்சயப்பர் கோவில் அருகே சென்றபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னால் நின்ற லாரிக்கு பின்புறம் விஜயராகவன் காரை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் மீது மோதியதால் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கி கார் சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் வந்த விஜயராகவன் உட்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.