அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் ஃபிஷர் என்ற பெண்மணி, டெல்லியின் மோசமான காற்று மாசுபாட்டிற்கு நடுவே தனது குடும்பம் எப்படி வாழ்கிறது என்பது குறித்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் அவர், தனது வீட்டின் வெளியே காற்றின் தரம் (AQI) 210 என்ற அபாயகரமான அளவில் இருப்பதையும், வீட்டிற்குள் நுழைந்தவுடன் அது 50 என்ற பாதுகாப்பான அளவிற்கு குறைவதையும் கருவி மூலம் ஆதாரத்துடன் காட்டியுள்ளார்.
காற்றில் உள்ள நச்சுத்தன்மையிலிருந்து தப்பிக்க தனது வீட்டில் பல காற்று சுத்திகரிப்பான்களை நிறுவியுள்ளதாகவும், குளிர்காலங்களில் தனது குடும்பத்தினர் வீட்டிற்குள்ளேயே அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும் அவர் அந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.
இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வரும் நிலையில், டெல்லியின் காற்று மாசு குறித்த கவலையை மீண்டும் பொதுவெளியில் முன்னிறுத்தியுள்ளது. நவம்பர் முதல் ஜனவரி வரை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்றும், காற்று சுத்திகரிப்பான்கள் இல்லையென்றால் வீட்டிற்குள்ளும் நச்சுக்காற்றையே சுவாசிக்க வேண்டியிருக்கும் என்றும் கிறிஸ்டன் எச்சரித்துள்ளார்.
View this post on Instagram
“>
இதைப் பார்த்த இணையவாசிகள் பலர், உயிர்வாழத் தேவையான அடிப்படைத் தேவையான காற்று கூட இன்று விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலில் இருப்பதை எண்ணி வருத்தம் தெரிவித்துள்ளனர். சுத்தமான காற்று என்பது இனி வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்குமா என்ற சமூகக் கேள்வியையும் இந்த வீடியோ எழுப்பியுள்ளது.
