தொடர்ந்து இது போல் சிறப்பாக விளையாடுங்கள் என விராட்கோலியை பாராட்டினார் சச்சின் டெண்டுல்கர்..

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்தது. இந்திய அணியில்  அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார்.

பின்னர் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணி தோல்வி அடைந்தாலும் கூட அந்த அணியின் கேப்டன் சானகா 88 பந்துகளில் 108 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இந்திய வீரர் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டித் தூக்கினார்..

இது (சதம்) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு 45 ஆவது சதமாகும். ஒட்டுமொத்தமாக கோலிக்கு இது 73ஆவது சதமாகும். அதேசமயம் உள்நாட்டில் (சொந்த மண்ணில்) சச்சினுக்கு அடுத்தபடியாக 20 சதங்களை அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதனால் சச்சின் சாதனையை சமன் (20 சதம்) செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக இந்திய மண்ணில் விராட் கோலிக்கு இது 9ஆவது சதமாகும். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 49 சதம் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 45 சதம் அடித்துள்ளார் இன்னும் 4 சதம் அடித்தால் சச்சின் சாதனையை சமன் செய்வார். ஒட்டுமொத்தமாக 3 வகை கிரிக்கெட்டிலும் சச்சின் 100 சதமும், விராட் கோலி 73 சதமும், ரிக்கி பாண்டிங் 71 சதமும் அடித்துள்ளனர். இதனால் விராட் கோலியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு எதிரான விராட்கோலியின் இன்னிங்க்ஸை  பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர்ந்து இது போல் சிறப்பாக செயல்படுங்கள்
இந்தியாவின் பெயரை தொடர்ந்து ஒளிரச் செய்யுங்கள்.” என்றார். மேலும் ரோஹித் மற்றும் கில்லை பாராட்டி டாப் ஆர்டரின் சிறப்பான பேட்டிங் செயல்திறன்! என்று குறிப்பிட்டார்.