
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை இலவச மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டமும் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளின் போது மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களின் பிறந்தநாளின் போது மதிய உணவுக்கு பதில் இனிப்பு பொங்கல் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது இது மாற்றியமைக்கப்பட்டு மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கலும் வழங்கப்படும். மேலும் இதன் மூலம் 42 லட்சத்து 71 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.