தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தையும், அதன் சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கடத்தலையும் முற்றிலும் ஒழிக்கும் வகையில் ‘மாநில ஆன்டி-நர்கோடிக்ஸ் டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ற புதிய அதிரடிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தனிப்படை அமைப்பு நேரடியாக முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் பெருநகரக் காவல் ஆணையரகங்கள் என மொத்தம் 65 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 12 அலகுகளும், ஆவடி, தாம்பரம், மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் தலா இரண்டு அலகுகளும் செயல்படும்.

ஒவ்வொரு தனிப்படை அலகிலும் ஒரு ஆய்வாளர், நான்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், ரோந்துப் பணிகளுக்காக 67 கார்கள் மற்றும் 325 இருசக்கர வாகனங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் இயங்கும் இந்தத் தலைமையகத்தில், புலனாய்வு, இணையவழி குற்றப் புலனாய்வு, சட்ட உதவி, சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட 10 சிறப்புப் பிரிவுகள் செயல்படும்.

இணையவழி குற்றங்களை விசாரிக்க மாதந்தோறும் தலா 1 இலட்சம் ரூபாய் சம்பளத்தில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களும், சட்ட ஆலோசனைகளுக்கு ஒரு சட்ட ஆலோசகரும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

“>

 

போதைப்பொருள் கும்பல்களின் சொத்துகளை முடக்குதல், நிதிப் பரிமாற்றங்களை ஆய்வு செய்தல், தேசிய முகமைகளுடன் இணைந்து உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற பல்துறை ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழகத்தை முற்றிலும் போதைப்பொருளற்ற மாநிலமாக மாற்ற அரசு இந்தச் சீரிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.