தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து தன் திறமையால் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் படத்திற்கு பிறகு தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பிறந்த நாள் விழாவை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் கத்துக்குட்டி மற்றும் உடன்பிறப்பே போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் இரா. சரவணனும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்தல் அவர் செய்த உதவிகள் குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் விரிவாக பதிவிட்டிருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சினிமா துறையில் உள்ள ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டபோது அவருக்கு போதிய அளவு பணம் கிடைக்கவில்லை.

இயக்குனர் எச். வினோத் ஒரு லட்சம் கொடுத்தார். இதேபோன்று பலரும் உதவி செய்த நிலையில் போதிய அளவு பணத்தை திரட்ட முடியவில்லை. இது தொடர்பாக சிவகார்த்திகேயனிடம் தெரிவித்த போது உடனடியாக மொத்த செலவையும் அவர் ஏற்றுக் கொண்டார். பணத்தை கட்டியது மட்டுமின்றி அவரை அக்கறையாக பார்த்துக் கொள்ளவும் சொன்னார். இதேபோன்று நெல் ஜெயராமனின் மகன் மற்றும் நீட் தேர்வு பயிற்சிக்கு போராடிய பூக்கொல்லை சஹானா வரை எத்தனையோ பேருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இன்றளவும் உதவி செய்துதான் வருகிறார். அவர் உதவி செய்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மேலும் அப்படிப்பட்ட ஒரு உன்னதமான சிறப்பு வாய்ந்த மனிதர் சிவகார்த்திகேயன். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.