தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான விருமன், சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற 3 திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரான சென்னை திருவான்மியூரை சேர்ந்த வினோத் (29) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த சமயத்தில் நடிகர் கார்த்தி படப்பிடிப்புக்காக வெளியில் சென்று இருந்ததால் தற்போது சென்னைக்கு திரும்பியவுடன் உயிரிழந்த தன்னுடைய ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அதோடு வினோத்தின் குடும்பத்திற்கு நடிகர் கார்த்தி பண உதவி செய்வதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கார்த்தி தன்னுடைய ரசிகர் உயிரிழந்ததை நினைத்து வருத்தப்பட்டு அவருடைய குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் நடிகர் கார்த்தி உழவன் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி விவசாயத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதோடு பல்வேறு விதமான சமூக நல சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.