இந்தியாவின் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கார் விடுத்த அழைப்பின் பேரில் டென்மார்க் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் இளவரசி மேரி எலிசபெத் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் வருகின்ற 26 ஆம் தேதி இந்தியா வர உள்ளனர். இது குறித்து இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் பிரெட்டி ஸ்வானே கூறியதாவது “டென்மார்க்கின் இளவரசர், இளவரசி, மந்திரிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை 5 நாள் சுற்று பயணமாக வரும் 26 ஆம் தேதி இந்தியா வரவுள்ளனர்.

மேலும் டேனிஷ் நாட்டு நிறுவனங்கள் அல்லது எங்களின் தனியார் துறை முதலீட்டிற்கு ஏற்ற இடம் தமிழ்நாடு மட்டும்தான். ஏற்கனவே தமிழகத்தில் நிறைய டேனிஷ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஆற்றல் பிரிவில் நிறைய நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. காற்றாலைகளுக்கான இயந்திரம், தட்டுகள், கேபிள்கள் மற்றும் அதனுடைய உதிரி பாகங்கள் அனைத்தும் டேனிஷ் நிறுவனத்தால் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக டேனிஷ் நிறுவனம் பசுமை சக்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காகத்தான் எங்கள் நாட்டு நிறுவனங்களும், அரசர்களும், மந்திரிகளும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.