ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ஜல் மஹால் பகுதியில், ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த அநாகரிகமான சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் பெண் ஜல் மஹாலைப் ரசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரிய கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க வற்புறுத்தியுள்ளது.

முதலில் பொறுமையாக ஒத்துழைத்த அந்தப் பெண்ணிடம், மெல்ல மெல்ல அந்தக் கும்பல் அத்துமீறத் தொடங்கியுள்ளது. அவரது அனுமதியின்றி மிக நெருக்கமாகச் செல்வது, தோள் மீது கையைப் போடுவது என அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்துள்ளனர். அந்த வீடியோவில் அந்தப் பெண்ணின் முகம் மற்றும் உடல் மொழி, அவர் எவ்வளவு சங்கடத்திற்கும் பயத்திற்கும் உள்ளாகியிருக்கிறார் என்பதை அப்பட்டமாகத் காட்டுகிறது.

“செல்பிதானே எடுக்கிறோம்” எனச் சாதாரணமான விஷயமாகச் சிலர் இதைக் கடந்து சென்றாலும், ஒரு பெண்ணின் தனிப்பட்ட எல்லைகளை மீறி நடக்கும் இத்தகைய செயல்கள் அப்பட்டமான பாலியல் துன்புறுத்தலே எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “விருந்தினரைத் தெய்வமாக மதிக்கும் இந்தியாவில், ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு இதுதானா?” என எக்ஸ் (X) தளத்தில் நெட்டிசன்கள் கொதித்து வருகின்றனர்.


இத்தகைய சம்பவங்கள் இந்தியாவின் சர்வதேசப் புகழுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்துவதோடு, வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வர அச்சப்படும் சூழலையும் உருவாக்கியுள்ளது. இந்தக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.