ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்திருக்கும் இந்த அதிர்ச்சிகரமான ரோடு ரேஜ் சம்பவம், தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டிராஃபிக்கில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு இளைஞரின் ராயல் என்பீல்டு பைக், ஒரு பெண்ணின் ஸ்கூட்டர் மீது லேசாக உரசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சிறிய விபத்துக்காக அந்தப் பெண் காட்டிய ஆக்ரோஷம் அங்கிருந்தவர்களை உறைய வைத்துள்ளது.

ஆத்திரத்தில் தனது ஹெல்மெட்டை கழட்டி அந்த இளைஞரின் பைக்கை சரமாரியாகத் தாக்கிய அந்தப் பெண், சிறிது நேரத்தில் சாலையோரம் கிடந்த செங்கலை எடுத்து பைக்கின் ஹெட்லைட், ஸ்பீடோமீட்டர் என ஒவ்வொன்றையும் அடித்து நொறுக்கினார். ​அந்த இளைஞர் எவ்வளவோ அமைதியாகப் பேசியும், போலீஸை அழைக்கப்போவதாக எச்சரித்தும், “நீ யாரை வேணா கூப்பிட்டுக்கோ, என்ன ஒன்னும் பண்ண முடியாது” என அந்தப் பெண் திமிராகப் பேசியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

அருகில் டிராஃபிக் போலீஸார் இருந்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததுதான் நெட்டிசன்களின் கடும் கோபத்திற்குக் காரணமாகியுள்ளது. “இதே ஒரு பையன் பண்ணியிருந்தா இந்நேரம் ஜெயில்ல இருந்திருப்பான், ஆனா அந்தப் பெண் விக்டிம் கார்டு பிளே பண்ணுறாங்க” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் போலீஸார் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ஒரு வாகனத்தின் மீது காட்டப்பட்ட இந்த வெறித்தனமான தாக்குதல் ஜெய்ப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.