விசாகப்பட்டினம் அருகே நடைபெற்ற ‘மிலன் 2026’ பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில், இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலை பிலிப்பைன்ஸ் நாட்டின் ‘பிஆர்பி மிகுவெல் மால்வர்’ (BRP Miguel Malvar) போர்க்கப்பல் வெற்றிகரமாகக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்தப் பயிற்சியில், பிலிப்பைன்ஸ் கப்பல் மட்டுமே இந்த இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கடற்படை நடத்திய ‘மிலன் 2026’ கூட்டுப் பயிற்சியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் உட்பட 33 போர்க்கப்பல்கள் பங்கேற்றன. இதில் மிகவும் கடினமானதாகக் கருதப்படும் ‘நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்’ (Anti-Submarine Warfare) பயிற்சியின் போது, கடலுக்கு அடியில் மறைந்திருந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பலை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிநவீன ஏவுகணை தாங்கிப் போர்க்கப்பலான ‘மிகுவெல் மால்வர்’ சரியாக அடையாளம் காட்டியது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் கடற்படை செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் ராய் வின்சென்ட் டிரினிடாட் கூறியிருப்பதாவது,”விசாகப்பட்டினம் அருகே நடந்த பயிற்சியில் கலந்துகொண்ட 33 போர்க்கப்பல்களில், இந்திய நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்த ஒரே கப்பல் எங்களுடைய மால்வர் மட்டுமே. இது எங்களது கடற்படையின் வளர்ந்து வரும் திறமைக்குச் சான்றாகும். கடலுக்கு அடியில் சத்தங்கள் பரவும் விதத்தில் உள்ள நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டு எங்கள் வீரர்கள் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் கடற்படையிடம் உள்ள தொழில்நுட்பங்கள் மற்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இல்லாதபோதும், வீரர்களின் தனிப்பட்ட திறமையால் இது சாத்தியமாகியுள்ளது. அதிநவீன கருவிகளை முழுமையாகச் சார்ந்திராமல், கடல் நீரோட்டம் மற்றும் ஒலியலைகளைக் கவனிக்கும் வீரர்களின் கூர்மையான புத்திசாலித்தனம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த பிப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்ற இந்த ‘மிலன்’ பயிற்சியில் பிலிப்பைன்ஸ் நாடு முதன்முறையாகப் பங்கேற்றது. மேலும் முதல் முயற்சியிலேயே இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பிடத்தைக் கண்டறிந்ததன் மூலம், ஆசிய பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸ் கடற்படையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.