பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026  மார்ச் 26 அன்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உலக அரங்கில் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில், வெள்ளை நிற பந்து திடீரென சிவப்பாக மாறியது. வீரர்கள் பந்தைப் பளபளப்பாக்கத் தங்கள் சீருடையில் தேய்த்தபோது, தரம் குறைந்த ஜெர்சியிலிருந்து சாயம் பிரிந்து பந்தில் ஒட்டிக்கொண்டது. “பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சீருடைகளின் தரம் இவ்வளவுதானா?” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பாதுகாப்பு கருதி மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் லாகூர் மற்றும் கராச்சி என இரண்டு மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகள் நடப்பது வீரர்களிடையே உற்சாகத்தைக் குறைத்துள்ளதோடு, ஒளிபரப்பு தரத்தையும் பாதித்துள்ளது.

 

பொதுவாக ஒரு பெரிய கிரிக்கெட் தொடர் என்றால் மைதானம் முழுவதும் விளம்பரப் பலகைகள் (Sponsors Banners) நிறைந்திருக்கும். ஆனால், இந்த ஆண்டு பி.எஸ்.எல் தொடருக்குப் போதிய விளம்பரதாரர்கள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. மைதானத்தில் விளம்பரங்கள் இன்றி வெற்றுப் பலகைகளுடன் போட்டி நடத்தப்படுவது பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியைப் பறைசாற்றுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் லீக்கை விட இந்திய இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) தொடரே சிறந்தது எனக் கருதி, பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் பி.எஸ்.எல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளனர். அவர்கள் பாகிஸ்தானைப் புறக்கணித்துவிட்டு இந்தியாவுக்கு விளையாடச் சென்றது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது. முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலாண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் குவித்தது. மேலும் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணி 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து, 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.