நம்ம சமையலில் முக்கியமான இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் இப்படியொரு பகீர் கலப்படமா? ஐதராபாத் ஐடிஏ கட்டேதன் பகுதியில், ஹசன் அலி ரூபானி என்பவன் நடத்திய ‘SKR Food Products’ நிறுவனத்தில் நடந்த அதிரடி சோதனையில் 22 லட்ச ரூபாய் மதிப்பிலான கலப்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அசிட்டிக் அமிலம் (Acetic acid) மற்றும் சாந்தன் கம் (Xanthan gum) பவுடர்களைக் கலந்து, ஈக்கள் மொய்க்கும் அசுத்தமான பிளாஸ்டிக் டப்பாக்களில் இந்த பேஸ்ட் தயாரிக்கப்பட்டது அதிகாரிகளை அதிரவைத்துள்ளது. இந்த நச்சு கலந்த பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் மற்றும் கேட்டரிங் சர்வீஸ்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.

​உணவு பாதுகாப்பு விதிமுறைகளைத் துளியும் மதிக்காமல், மரக்கட்டைகளைக் கொண்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கப்பட்டதும் சோதனையில் அம்பலமாகியுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட 150 மூட்டை இஞ்சி, கிரைண்டர்கள் மற்றும் லிட்டர் கணக்கான ரசாயனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மக்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற போலி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கடைகளில் வாங்கும் மசாலா பொருட்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.