அதிமுக ஆட்சியையும் அதன் நிர்வாகத்தையும் ஊழல் என்று விமர்சித்த தளபதி விஜய், அதே ஆட்சியில் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவரைத் தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அருகில் அமர வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அதிமுகவினர் பொங்கியுள்ளனர். “தூய சக்தி” என்று பேசிக்கொண்டு, அதிமுகவின் தூணாக இருந்தவர்களையே தஞ்சம் புக வைப்பது விஜய்யின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று அவர்கள் சாடியுள்ளனர். பேச்சிற்கும் செயலுக்கும் துளிக்கூடச் சம்பந்தம் இல்லை என்பதை இந்தச் சம்பவமே ஊர்ஜிதப்படுத்துவதாக அதிமுக ஐடி விங் செம காட்டமாகப் பதிவிட்டுள்ளது.

​ஒருபுறம் ஊழல் எதிர்ப்பு, மறுபுறம் அதே ஊழல் என்று தான் விமர்சித்த ஆட்சியின் அமைச்சரை அருகில் வைத்துக்கொள்வது என தவெக-வின் அரசியல் நிலைப்பாட்டை அதிமுகவினர் கடுமையாக எள்ளி நகையாடியுள்ளனர். இதுதான் நீங்கள் சொல்லும் மாற்றமா? என்று கேட்டு அவர்கள் எழுப்பியுள்ள கேள்விக்குத் தற்போது தவெக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதிமுக – தவெக இடையிலான இந்த மல்லுக்கட்டு இப்போது தனிநபர் விமர்சனங்களைத் தாண்டி கொள்கை ரீதியிலான மோதலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.