கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில், வயதான பெண்மணி ஒருவர் அங்குள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கருவியை மிகவும் ஆபத்தான முறையில் தவறாகப் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள், பூங்காவில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்களின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பயனர் ஒருவர், இதுபோன்ற பொது இடங்களில் உள்ள உடற்பயிற்சி கருவிகளை எவ்வாறு சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறைகள் அங்கு தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும், எதிர்பாராத விதமாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“>

இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர் அந்தப் பாட்டியின் அதீத ஆற்றலையும் ஆர்வத்தையும் பாராட்டி வரும் நிலையில், பெரும்பான்மையான மக்கள் இதனைப் பார்த்துப் கேலி செய்வதை விடுத்து, அவர்களுக்குச் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இதனால் அனைத்து வயதினரும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில், உள்ளூர் நிர்வாகம் உடற்பயிற்சி கருவிகளுக்கு அருகில் எச்சரிக்கைப் பலகைகளையும், பயன்படுத்தும் முறைகளையும் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்மணிக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், பொதுப் பூங்காக்களில் உள்ள உடற்பயிற்சி கருவிகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பெரிய விவாதத்தை இது சமூக வலைத்தளங்களில் கிளப்பியுள்ளது.