ஜப்பான் நாட்டின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் 6 மாத ‘மக்காக்கு’ (Macaque) இனத்தைச் சேர்ந்த ‘பஞ்ச்’ என்ற குட்டி குரங்கு இப்போது இணையதளங்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கடந்த 2025 ஜூலை மாதம் பிறந்த இந்தப் பஞ்ச் குட்டியை, அதன் தாய் குரங்கு பிறந்த உடனேயே கைவிட்டுச் சென்றது. இதனால் அந்தப் பூங்காவின் ஊழியர்கள் இந்தக் குட்டியைப் பராமரித்து வருகின்றனர். பொதுவாகக் குரங்கு குட்டிகள் பிறந்ததிலிருந்தே தாயின் மார்போடு ஒட்டிக் கிடக்கும் பழக்கம் கொண்டவை. பஞ்ச் குட்டித் தாயின் அரவணைப்பு இல்லாமல் தவிப்பதைப் பார்த்த ஊழியர்கள், அதன் ஏக்கத்தைப் போக்கப் போர்வை மற்றும் சில பொம்மைகளைக் கொடுத்துள்ளனர்.

​அந்தப் பொம்மைகளில் ஒரு ஆரஞ்சு நிற ‘ஒராங்குட்டான்’ பொம்மையைத்தான் பஞ்ச் தனது தாயாகத் தேர்ந்தெடுத்தது. எங்குச் சென்றாலும் அந்தப் பொம்மையைத் தன் கைகளாலேயே இறுகக் கட்டிக் கொண்டு செல்லும் பஞ்ச், மற்ற குட்டி குரங்குகள் தன்னைக் கடிக்கவோ அல்லது திட்டவோ வந்தால் அந்தப் பொம்மையைத் தனக்கு ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. தற்போது மற்ற குரங்குகளுடன் இந்தப் பஞ்ச் குட்டி பழகத் தொடங்கியிருந்தாலும், இன்னும் அந்தப் பொம்மையை மட்டும் விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. “பெற்ற தாய் கைவிட்டாலும், யாராவது ஒருவர் வந்து அரவணைப்பார்” என்பதற்குப் பஞ்ச் குட்டியின் இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.