2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு, தவெக தலைவர் விஜய்யின் விக்கிரவாண்டி மாநாட்டை நகலெடுத்தது போல் இருந்ததாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
விருதுநகர் மாநாட்டில், தொண்டர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த நீண்ட மேடையில் (Ramp) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது தொண்டர்கள் வீசிய துண்டுகளை அவர் கழுத்தில் அணிந்து கொண்டது, விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் செய்ததை நினைவுபடுத்துவதாக தவெகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
View this post on Instagram
அதேபோல், மாநாட்டின் இறுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேடையிலிருந்து தொண்டர்களைப் பின்னணியாக வைத்து ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுவும் விஜய் தனது மாநாட்டில் செய்த அதே பாணியிலான செயல் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
View this post on Instagram
இது தொடர்பாக தவெக ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள வீடியோக்களில், “எங்கள் தலைவரை திமுக அப்படியே காப்பி அடிக்கிறது” என சாடியுள்ளனர். குறிப்பாக, விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் அணிந்திருந்த அதே நிறத்திலான பேண்டை முதலமைச்சர் ஸ்டாலினும் அணிந்திருப்பதை ஒப்பிட்டு, பல மீம்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு திமுகவை கிண்டல் செய்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு, திமுக தனது பிரசார பாணியை மாற்றிக்கொண்டு வருகிறதா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர். ஒருபுறம் ஆளுங்கட்சி தனது பலத்தைக் காட்ட மாநாடுகளை நடத்தினாலும், மறுபுறம் ‘தவெக-வைப் பார்த்து திமுக பயப்படுகிறது’ என்ற பிம்பத்தை உருவாக்க அக்கட்சியினர் முயன்று வருகின்றனர்.
