உள்நாட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக 20 சதங்களை அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்..

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 3:1 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இருக்கும் பர்சபரா ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, கேஎல் ராகுல்  ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி விக்கெட் இழக்காமல் 100 ரன்களை கடந்தது.

பின் சானகாவின் 20ஆவது ஓவரில் கில் 60 பந்துகளில் (11 பவுண்டரி) 70 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதையடுத்து விராட் கோலி – ரோஹித் சர்மா இணைந்து ஆடினர். காயத்திலிருந்து மீண்டு வந்த ரோகித் சர்மா சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுஷாங்கா வீசிய 24ஆவது ஓவரின் முதல் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். ரோஹித் 67 பந்துகளில் 9  பவுண்டரி 3 சிக்ஸர் உடன் 83  ரன்கள் எடுத்து அவுட் ஆனதை தொடர்ந்து, விராட் கோலி – ஷ்ரேயஸ் ஐயர் இணைந்தனர். பின் ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ராகுல் தன் பங்குக்கு 39 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

அதன்பின் ஹர்திக் பாண்டியா 14 , அக்சர் படேல் 9 ரன்களிலும் அவுட் ஆகினர். இருப்பினும் மறுமுனையில் கோலி அற்புதமாக ஆடி சதம் விளாசினார். பின் 49ஆவது ஓவரில் 87 பந்துகளில் (12 பவுண்டரி, 1 சிக்ஸர்) 117 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டமிழந்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு 45 ஆவது சதமாகும். அதேசமயம் உள்நாட்டில் (சொந்த மண்ணில்) சச்சினுக்கு அடுத்தபடியாக 20 சதங்களை அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதனால் சச்சின் சாதனையை சமன் (20 சதம்) செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக இந்திய மண்ணில் விராட் கோலிக்கு இது 9ஆவது சதமாகும். இதனால் விராட் கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்தது.  ஷமி 4, சிராஜ் 7 ரன்னுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 49 சதம் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 45 சதம் அடித்துள்ளார் இன்னும் நான்கு சதம் அடித்தால் சமம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.