மும்பையில் ரோட்டில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், 82 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராதாகிருஷ்ணா கே. பி. மேனன் என்ற அந்த முதியவர், தனது மாலை நேர வழக்கப்படி தனது பேத்தியைச் சந்திப்பதற்காக நடந்து சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

அதிவேகமாக வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து முதியவர் மீது மோதியதில் விபத்தின் வீரியம் தாங்காமல் அவர் அங்கேயே உயிரிழந்தார். தற்பொழுது விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டியின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள உள்கட்டமைப்பைச் சீரமைக்கவும், அதிவேக வாகன ஓட்டிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

<a href=”http://

“>

இதேபோல் மும்பையின் பிற பகுதிகளிலும் அடுத்தடுத்து நடந்த விபத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிவேகமாக வந்த மாருதி சுசூகி பிரெஸ்ஸா கார் நான்கு வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 55 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் தப்பியோடியுள்ளார். மற்றொரு சம்பவமாக, சாலையில் 74 வயது முதியவர் ஒருவர் தனது கியா காரை ஓட்டி வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் காய்கறி கடையின் மீது மோதினார்.

இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, ஒரு தாயும் அவரது இரண்டு வயதுக் குழந்தையும் படுகாயமடைந்தனர். இதில் குழந்தையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறியுள்ள போலீசார், காரை ஓட்டிய முதியவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.