உணவு விநியோகச் செயலிகளான சொமாட்டோ (Zomato) மற்றும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளின் விலை, உணவகங்களின் நேரடி விலையை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக எழுந்துள்ள புகார் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் நளினி என்ற பெண், உணவகத்தில் ரூ.320-க்கு விற்கப்படும் உணவு, சொமாட்டோ செயலியில் ரூ.655 எனப் பட்டியலிடப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டார்.
<a href="http://

“>
தள்ளுபடிக்குப் பிறகும் ரூ.550 செலுத்த வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது வாடிக்கையாளர்களை பகிரங்கமாக ஏமாற்றும் செயல் எனச் சாடியுள்ளார். இதற்குப் பதிலளித்த சொமாட்டோ நிறுவனம், விலையை உணவகங்களே தீர்மானிப்பதாகவும், தாங்கள் ஒரு இடைத்தரகராக மட்டுமே செயல்படுவதாகவும் கூறி தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ (LocalCircles) நடத்திய ஆய்வில், சுமார் 55 சதவீத வாடிக்கையாளர்கள் உணவு விநியோகச் செயலிகளில் விலையேற்றம் இருப்பதாகக் கருதுவது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 359 மாவட்டங்களில் 79,000-க்கும் மேற்பட்ட நுகர்வோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், செயலிகள் வசூலிக்கும் 25 முதல் 30 சதவீத கமிஷன் தொகையை ஈடுகட்டவே உணவகங்கள் விலையை உயர்த்திப் பட்டியலிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வசதிக்காக கூடுதல் கட்டணம் செலுத்தலாம் என்றாலும், 80 சதவீதம் வரை விலை வித்தியாசம் இருப்பது நியாயமற்றது எனப் பயனர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இதனால், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விலைகளை வெளிப்படையாகப் பட்டியலிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது