மழைக்கால மாலையில் சூடான, பொன்னிறமான, மொறுமொறுப்பான பக்கோடா சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். ஆனால் மழைக்கால ஈரப்பதத்தில் பக்கோடாக்கள் சீக்கிரமே மெதுவாகிவிடாமல், நீண்ட நேரம் கடைகளில் வாங்குவது போல மொறுமொறுப்பாக இருக்க சில எளிய சமையல் தந்திரங்களைப் பின்பற்றினாலே போதுமானது.

பக்கோடா செய்வதற்கு கடலை மாவுடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு அல்லது சோள மாவு (Corn flour) சேர்க்க வேண்டும். இது பக்கோடா அதிக எண்ணெய் உறிஞ்சுவதைத் தடுத்து, வெளிப்புறத்தில் நல்ல மொறுமொறுப்பத் தரும். மேலும் காய்கறிகளை மாவில் முக்குவதற்கு முன், தயாரித்த மாவில் ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெயை ஊற்றிக் கலப்பது, பக்கோடாவை மிகவும் லேசாகவும் மொறுமொறுப்பாகவும் மாற்றும் ஒரு ரகசிய வழியாகும்.

வெங்காயம் மற்றும் கீரை போன்ற காய்கறிகளில் இயற்கையாகவே நீர்ச்சத்து இருக்கும் என்பதால் மாவில் தண்ணீரை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும். காய்கறிகளை நறுக்கி சிறிது உப்பு தடவி வைத்து, 5 நிமிடங்களுக்குப் பிறகு வெளிவரும் அதிகப்படியான தண்ணீரைப் பிழிந்து எடுத்துவிட்டு மாவில் சேர்த்தால், பக்கோடா குழைந்து போகாமல் மொறுமொறுப்பாக வரும். அதேபோல சமையல் சோடா சேர்ப்பதாக இருந்தால் மிகக் குறைந்த அளவில் மட்டுமே சேர்க்க வேண்டும்; அதிக சோடா சேர்த்தால் பக்கோடா எண்ணெயை அதிக அளவில் உறிஞ்சிவிடும்.

பக்கோடாவை மிதமான சூடுள்ள எண்ணெயில் பொரித்தெடுப்பது மிக முக்கியம். எண்ணெய் சூடு குறைவாக இருந்தால் பக்கோடா எண்ணெயைக் குடிக்கும், அதிக சூடாக இருந்தால் வெளியே கருகி உள்ளே வேகாமல் போய்விடும். உணவகங்களில் செய்வது போல அதிகபட்ச மொறுமொறுப்பு வேகம் என்றால், பக்கோடாவை முதலில் அரை வேக்காடாகப் பொரித்து எடுத்து 2 நிமிடங்கள் ஆறவைத்து, பின்னர் இரண்டாவது முறையாக எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கலாம்.

பொரித்தெடுத்த சூடான பக்கோடாக்களை பேப்பர் டவலில் வைப்பதற்குப் பதிலாக ஒரு கம்பித் தட்டில் ஆறவைக்க வேண்டும். பேப்பர் டவலில் வைத்தால் அதிலிருந்து வெளிவரும் நீராவி அடியிலேயே தங்கி பக்கோடாவை மென்மையாக்கிவிடும். இந்த எளிய முறைகளைப் பின்பற்றிச் செய்தால் மழைக்காலத்திலும் சுவையான, மொறுமொறுப்பான பக்கோடாக்களை எளிதாகச் செய்யலாம்.