வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முயற்சி, சீனாவைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த அந்தப் பெண் 15 நாட்களுக்கு உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே குடித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் சில வாரங்களில் சுமார் 20 கிலோ எடையை குறைத்துள்ளார்.
ஆனால் எடை குறைந்த பிறகு அவருக்கு நடப்பதில் சிரமம், நினைவாற்றல் குறைவு மற்றும் உடல் சமநிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு வெர்னிக்கே என்செபலோபதி எனப்படும் தீவிர நரம்பியல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது உடலில் குறிப்பாக வைட்டமின் பி1 எனப்படும் தையமின் கடுமையாகக் குறைவதால் ஏற்படக்கூடிய நிலையாகும்.
மருத்துவர்கள் கூறியதன்படி, அந்தப் பெண்ணின் நடை மிகவும் தடுமாற்றமாக மாறி, பென்குயின் நடையைப் போல காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பு முழுமையாக குணமடையாமல் போகும் வாய்ப்பும் இருப்பதாக நரம்பியல் மருத்துவர் சன் குய்ஃபாங் எச்சரித்துள்ளார்.
இந்தப் பெண் உணவைத் தவிர்க்கும் பாரம்பரியமான ‘பிகு’ என்ற முறையைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் உணவை நீண்ட நாட்களுக்கு முற்றிலும் தவிர்ப்பது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதைத் தடுத்து, கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே வேகமாக எடை குறைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தீவிர உணவுக் கட்டுப்பாடுகளை மருத்துவ ஆலோசனையின்றி மேற்கொள்வது ஆபத்தானது.
