
கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8-ம் தேதி இவர் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தனியார் மதுபான கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இவரை கற்களாலும், பாட்டிலாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த முத்துவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இந்நிலையில் முத்து தாக்கப்படும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. ஆகவே முத்துவின் உயிரிழப்பிற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளப்பாக்கம் கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கையில் குழந்தையுடன் முத்துவின் மனைவியும் போராட்டத்தில் பங்கேற்ற காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இதனையடுத்து அங்கு புதுச்சேரி காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் முத்துவை கொலை செய்த குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்திட வேண்டும், அதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு புதுச்சேரி அரசு வேலை வழங்கிட வேண்டும் எனவும், முத்துவின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதோடு மதுபான கடை உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை கிராம மக்கள் முன் வைத்தனர். அதனுடன் அந்த மதுபான கடையை மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து முத்துவை கொலை செய்த ராஜேஷ், ரஞ்சித், ஆனந்த்ராஜ் ஆகிய 3 பேரை பாகூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கிராம மக்களிடம் தெரிவித்த பின்னர் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.