கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இஞ்சி விளை பகுதியில் ஆட்டோ டிரைவரான ரஞ்சித்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர் விட்டு திருமணம் நிகழ்ச்சிக்கு சென்று திருமணம் முடிந்ததும் தனது நண்பர்களான ரிஜூ(36), ரெஜி(40), விபிஜ்(35) ஆகியோருடன் மது குடித்துள்ளார். போதை தலைக்கேறியதும் ரஞ்சித்துக்கும், மற்ற நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ரஞ்சித் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று விட்டார். மற்ற மூன்று நண்பர்களும் ரஞ்சித்திற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்து ரஞ்சித்தின் வீட்டிற்கு சென்று அவரை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அப்போது ரஞ்சித்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் ரஞ்சித்தின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதற்கிடையே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரஞ்சித்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரஞ்சித்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரிஜூ, ரெஜி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.