சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை அங்கமுத்து தெருவில் டிரைவரான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீபிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராகேஷ் வர்ஷன்(25) என்ற மகன் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராகேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் சுருதி வேளச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ராகேஷ் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து தனது தாய் பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதாக தெரிவித்தார்.

இதனால் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்றது. அப்போது மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது ஸ்ரீ பிரியா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் ஸ்ரீபிரியாவிற்கு அருகே ராகேஷ் இரண்டு கைகளிலும் கத்தியால் அறுத்துக் கொண்டு இரத்த காயத்துடன் இருந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீபிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ராகேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராகேஷ் மது பழக்கத்திற்கு அடிமையானது தெரியவந்தது. இதனை கண்டித்த ஸ்ரீபிரியாவை போதையில் இருந்த ராகேஷ் தாய் என்று கூட பார்க்காமல் தலையைப் பிடித்து பின் பக்கத்தில் வேகமாக தள்ளியுள்ளார். இதனால் சுவற்றில் மோதி மயங்கி விழுந்து ஸ்ரீபிரியா உயிரிழந்தது தெரியவந்தது. அதன் பிறகு போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக ராகேஷ் தனது கையை அறுத்து கொண்டு நாடகமாடியது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.