கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை- சென்னை மெயின் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று காலை ஊழியரான ராமர் என்பவர் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் தங்களது வாகனத்திற்கு பெட்ரோல் போடும் படி கூறினர். அதற்கு ராமர் வரிசையில் வருமாறு கூறினார். இதனால் கோபமடைந்த வாலிபர்கள் ராமரை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த வாலிபர்கள் கோபத்தில் ராமரை சரமாரியாக தாக்கி எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து ராமர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராமரை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.