சேலம் மாவட்டத்தில் உள்ள செந்தாரப்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், சரவணன், பிரசாத் ஆகிய இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் தளுகையை சேர்ந்த சுரேஷ் என்பவரது நெல் களத்தில் கான்கிரீட் போடும் பணியில் மணிகண்டன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து எந்திரத்தை சுத்தம் செய்த போது மணிகண்டனின் இடது கை எந்திரத்தில் சிக்கியது. இதனால் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது இடது கை முழுவதும் நசுங்கி இருந்தது. இதனால் இடது கையை துண்டித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.