மதுரை மாவட்டத்தில் உள்ள சின்ன ரெட்டிபட்டி காட்டுப்பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி(28) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஆடு மேய்த்து கொண்டிருந்த சசி மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சசியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதே போல் அணைக்கரைப்பட்டி வாழைத்தோப்பு பகுதியில் கனமழை பெய்ததால் பட்டுப்புழு வளர்ப்பு கூடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் ராஜாத்தி, பவித்ரா, முத்துராஜ், டேவிட் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.