ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த அனைத்து மனுகளும் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் மற்றும் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள் தங்களது வாதத்தில், அனுமதி கோரி RSS அளித்த விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை எனவும்,  பேரணிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கேட்டுள்ள அதே காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பேரணி மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி  கோரும் வழித்தடத்தில் மசூதிகள் தேவாலயங்கள்,  மற்றும் குடியிருப்புகள் உள்ளதாகவும்,

அனுமதி கோரிய விண்ணப்பத்தில் அகண்ட பாரதம் கட்டமைப்போம் என கூறியுள்ளதாகவும், அந்த வரைபடத்தில் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அதனால் அரசுக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார் ? அதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர்,  இது மிகவும் முக்கியமான விவகாரம். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

பேரணியால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும்,  இந்த பேரணியால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் சார்பில் மூத்த  வழக்கறிஞர்கள் ராஜகோபால், ராஜா, காத்திகேயன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

கடந்த முறை பேரணிக்கு அனுமதி அளித்து  உச்ச நீதிமன்ற உத்தரவிட்டிருந்த நிலையில்,  தற்போது பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், அப்படி வழங்கவில்லை என்றால் ? அது நீதிமன்ற அவமதிப்பு எனவும் தெரிவித்தனர். தற்போதைய வாதத்தையே கடந்த முறையும் காவல்துறை முன்வைத்ததாகவும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டுப்பாடுகளுடன்  தான் உச்சநீதிமன்ற அனுமதித்துள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு காரணத்தை கூறி அரசு அனுமதி மறுத்து வருவதாகவும்,  அகண்ட பாரதம் அமைப்பது என்பது ஆர்.எஸ்.எஸ்-இன்  கொள்கைகளில் ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமையை எந்த காரணமும் இன்றி மறுக்கக்கூடாது எனவும்,  ஜாதகத்தை தவிர அனைத்து தகவல்களும் போலீசாரால் கேட்கப்பட்டதாகவும் ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினரிடம் கேட்கப்பட்டுள்ள கேள்வி போலவே அனுமதி கோரும் அனைத்து அமைப்பினரிடமும் கேட்கப்படுமா ? என நீதிபதி கேள்வி எழுப்பினார். போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு யார் அனுமதி கோரினாலும் இதே போல் கேள்வி கேட்கப்படும் எனஅரசு  சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,

அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுத்ததற்கு  போலீசார் கூறிய காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக  இல்லை எனவும்,  அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். உள்ளூர் நிர்வாகங்களை பொறுத்து மாவட்ட நிர்வாகம் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றி அணிவகுப்பு நடத்தலாம் என கூறிய நீதிபதி , சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்க கூடாது என ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு உத்தரவிட்டார். மேலும் 22 ஆம் தேதி அணிவகுப்புக்கான  வழித்தடத்தை 20ஆம் தேதிக்குள்ளும்,  29ஆம் தேதி பேரணிக்கான வழித்தடத்தை ஐந்து நாட்களுக்கு முன்னதாக இறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ள நீதிபதி,

வழித்தடத்தில் ஏதேனும் மாற்றம் வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறினால்,  அது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் பேரணி தொடங்கும் இடம் மற்றும் நிறைவடையும் இடம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்யக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். அணிவகுப்பு நடத்த அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ள நிலையில்,  அதற்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதி,  அமைதியான முறையில் பேரணி  நடத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும்,  அணி வகுப்புக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.