தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா. இவர் செந்தில் மற்றும் கவுண்டமணியுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய விசித்ரா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவங்கள் குறித்து விசித்ரா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அந்த காலத்தில் முகமூடி கொள்ளையர்கள் அதிகம்.

என் தந்தை முகமூடி கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். ஒருவேளை அவர்கள் முகத்தை பார்த்து விடுவாரோ என்ற அச்சத்தில் என் தந்தையை கொலை செய்திருக்கலாம். என் தந்தை இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அப்போது அவருடைய சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்து என் அம்மா மிகவும் வேதனைப்பட்டார். ஒரு சிறிய காயத்தையே என் அம்மாவால் தாங்க முடியாத போது என் தந்தையின் இறப்பால் எவ்வளவு துன்பத்தை அனுபவித்து இருப்பார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

என் தந்தையை பற்றி என் அம்மா பேசிக்கொண்டே இருப்பார். ஆனால் சமீபத்தில் அவரும் இறந்து விட்டார். இதனால் தற்போது பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் அநாதையாக இருக்கிறேன். தாய் தந்தையை இழந்து அனுபவிக்கும் துயரம் எவ்வளவு கொடுமையானது என்பதை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறேன் என்று வேதனையோடு கூறியுள்ளார். மேலும் விசித்ராவின் பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.