கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்ற பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் நடுவீரப்பட்டு புலவர் வீதியில் வசிக்கும் தணிகாசலத்தின் மனைவி தமிழ்ச்செல்வி என்பது தெரியவந்தது. இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆன நிலையில், தனியாச்சலம் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக தமிழ்செல்வியின் சகோதரர்கள் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வைத்தவர்களிடம் தகராறு செய்த போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தமிழ்செல்வி உள்பட 8 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழ் செல்வி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் மனு கொடுக்க வந்த தமிழ் செல்வி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.