சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ராணி என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொது மக்களிடம் அதிகமாக பணம் வசூலிப்பதாகவும், இழப்பீடு வழக்குகளை தனக்கு தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் இழப்பீடு தொகைகளில் இருந்து கமிஷன் பெற்றதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.

அந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி பள்ளிக்கரணை போலீஸ் சென்னை கமிஷனர் ஜேம்ஸ் விசாரணை நடத்திய போது ராணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தாம்பரம் கூடுதல் கமிஷனர் காமினி கடந்த 7 மாதங்களாக விசாரணை நடத்தி தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ராணியை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.