திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தனது மகனுடன் மனு கொடுக்க வந்த பெண் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன் மீதும், தனது மகன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த நாகேந்திரனின் மனைவி மகேஸ்வரி என்பது தெரியவந்தது. இவருக்கு 7 வயதில் மகளும், 3 வயதில் மகனும் இருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேஸ்வரியின் கணவரை சிலர் அடித்து கொலை செய்துவிட்டனர். அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் மகேஸ்வரி தனது மகனுடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அவரை போலீசார் எச்சரித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தனர். பின்னர் மகேஸ்வரியை தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.