கர்நாடகாவின் மங்களூரு அருகே குளூர் தேசிய நெடுஞ்சாலை 66-ல், 44 வயது பெண் ஒருவர் தனது ஸ்கூட்டர் பள்ளத்தில் மோதி தடுமாறி விழுந்தபோது, பின்னால் வந்த மீன் ஏற்றி வந்த லாரி அவரை மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதவி என அடையாளம் காணப்பட்ட அந்த பெண், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தவர். இந்த துயர சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் @vani_mehrotra என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சாலை பராமரிப்பு குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது.

காவல்துறை, லாரி ஓட்டுநர் முகமது ஃபாரூக்கை கைது செய்தாலும், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறி, அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாதவியை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வீடியோ, சாலைகளில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மீண்டும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. நெட்டிசன்கள், “சாலை பராமரிப்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.