கோவாவிலிருந்து தில்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய அமெரிக்கப் பெண் பயணி ஒருவரின் உயிரை, அதே விமானத்தில் பயணித்த கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மகப்பேறு மருத்துவருமான டாக்டர் அஞ்சலி நிம்பால்கர் தக்க சமயத்தில் சிகிச்சையளித்து மீட்ட சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜென்னி என்ற அந்தப் பெண், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உடல் நடுங்கி, இரத்த அழுத்தம் குறைந்து, நாடித் துடிப்பும் நின்று மயக்கமடைந்துள்ளார். இதைக் கண்டதும் உடனே செயல்பட்ட டாக்டர் அஞ்சலி, தனது மருத்துவப் பயிற்சியின் அடிப்படையில் அவருக்கு மார்பு அழுத்தம் கொடுத்து செய்யும் அவசரச் சிகிச்சையை அளித்து, மூச்சுத் திரும்ப வரச் செய்தார்.

சில நிமிடங்கள் நிலைமை சீரடைந்தாலும், அரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவரது உடல்நிலை மோசமடையவே, விமானம் தில்லிக்கு வந்து சேரும் வரை அவருடன் இருந்து தொடர்ந்து சிகிச்சையும், கண்காணிப்பும் அளித்தார். தில்லியில் விமானம் தரையிறங்கியதும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதையும் அவர் உறுதி செய்தார்.

“எனக்கு நீங்கள் ஒரு தேவதூதர் போல் வந்தீர்கள்” என ஜென்னி நெகிழ்ச்சியுடன் கூறிய நிலையில், டாக்டர் அஞ்சலியின் இந்த மனிதநேயமிக்க செயலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் வெகுவாகப் பாராட்டினார்.