சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கோட்டை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியும், துரைராஜ் இணைந்து தங்களது நிலங்களில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர். நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்து குதறியது. மறுநாள் காலை 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு துரைராஜும், சுப்பிரமணியும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கும், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் கால்நடை டாக்டர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆடுகளின் உடல்களை  பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். முதற்கட்ட விசாரணையில் வெறிநாய் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.