425 ஆசிரியர் காலி பணி இடங்களுடன் பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டு இருக்கின்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2010 – 2011 ஆம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக  வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை இரத்து செய்ய கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்றும்,  காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ்பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன ? 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது ? தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவது ஏன் ?  உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவமானAICTE இன் விதிமுறையின் படி உதவி பேராசிரியர்கள்,  இணை பேராசிரியர்,  பேராசிரியர் என 1745 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும்,  ஆனால் 981 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அறிவித்த 56 பேர் மட்டுமே பணியில் உள்ளதாகவும், 425 இடங்கள் காலியாக உள்ளது. AICTE விதிமுறையின்படி  1189 காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்ததால் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என பல்கலைக்கழகம் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  நீதிமன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றும், 2020ல் தனி நீதிபதி,

காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்த பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தும் இவ்வளவு காலி பணியிடங்களை வைத்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது ? என புரியவில்லை எனவும் நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்தனர்.

இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் ? 425 காலி இடங்களை வைத்துக் கொண்டு எப்படி பல்கலைக்கழகம்  செயல்படுகிறது ? என பல்கலைக்கழக பதிவாளர்விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,  வழக்கினுடைய விசாரணையை 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள். அதற்கு தவறினால் பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.