ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில், சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்தான விதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடிலெய்டு ஓவலில் நடைபெற்ற இந்தப் போட்டி மழையின் காரணமாக ஏற்கனவே 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 45 ரன்கள் எடுத்தது. பதிலுக்குக் களமிறங்கிய சிட்னி தண்டர் அணி 2.5 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்து, வெற்றிக்கு வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இருந்தது. இந்த நேரத்தில், திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிட்னி தண்டர் அணிக்கு 13 பந்துகள் இருந்த நிலையில், ஆடுகளம் விளையாட உகந்ததாக இல்லை என்று அம்பயர்கள் அறிவித்து, போட்டியை ரத்து செய்தனர். இது, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சிட்னி தண்டர் அணிக்கு ஏமாற்றத்தை அளித்தது.
No one can believe it! With the @ThunderBBL needing just 3 runs to win, the match was abandoned 🫣 #WBBL11 pic.twitter.com/Azh7FoAcCz
— Weber Women’s Big Bash League (@WBBL) November 28, 2025
வெற்றியின் விளிம்பில் இருந்தபோதிலும் போட்டி ரத்து செய்யப்பட்டதால், சிட்னி தண்டர் அணியின் கேப்டன் லிட்ச்பீல்ட், இந்த நாள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக ஃபாஸ்ட் ஸ்போர்ட்ஸிடம் வருத்தம் தெரிவித்தார். “குறைந்தது ஒரு பந்தாவது மிச்சமிருந்தால், ஆட்டத்தின் முடிவை முடிவு செய்திருக்கலாம்” என்று சிட்னி தண்டர் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டது.
இருப்பினும், ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டன் தாலியா மெக்ராத் பேசுகையில், மழை நின்றாலும் பந்து வழுக்கும் தன்மையில் இருந்ததால், அம்பயர்கள் எடுத்த முடிவு சரியானதுதான் என்று தெரிவித்தார். வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்வமான போட்டியின் முடிவைக் காண முடியாமல் போனதற்கு தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
