கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கடலூர் மாவட்டத்தில்  சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும்.
இந்நிலையில் தனியார், பொதுத்துறை, கூட்டுத்துறை நிறுவனங்களை சேர்ந்த தொழில், சேவை, மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பில் ஒரு பகுதியாக பொருளாதார மேம்பாட்டு பணியில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

ஆகவே 2022-ம் ஆண்டில் இருந்து  ஒவ்வொரு வருடமும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விருதினை வழங்க முடிவு எடுக்கபட்டது. மேலும்  தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும்  சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த விருதினை பெற பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள்  விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து தொண்டு நிறுவனங்கள் தனித்துவமான அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்கள்,  மன்றங்கள் உள்ளிட்டவை இந்த விருதினை பெற தகுதியற்றவை ஆகும்.

மேலும்  சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள் இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல், விவசாயம், கால்நடை, கல்வி, பொது சுகாதாரம், குடிநீர் மழை நீர் சேகரிப்பு, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், மரபு சாரா எரிசக்தி,  ஆகிய சேவைகளில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பத்தை  www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். எனவே தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என  அவர் கூறியுள்ளார்.