புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொக்கநாதபட்டியில் செல்வம்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இவர்கள் பொன்னமராவதி சந்தையில் சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். நேற்று சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தது.

இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் மளிகை கடை ஓரமாக மழைக்கு ஒதுங்கி நின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தகர மேற்கூரை பறந்து செல்வம் மீது விழுந்து அவரது வயிற்றுப் பகுதியில் பலமாக வெட்டியது. இதனால் சம்பவ இடத்திலேயே செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று செல்வத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.