மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் படி மருந்துகளின் விலைகளை வருடந்தோறும் 10% வரை அதிகரித்துக்கொள்ள இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் மாதம் முதல் அதிகரிப்பதற்கு மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய நோய் உட்பட 27 வகையான நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கிறது. இதனிடையே அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் 384 மருந்துகள் இடம்பெற்று இருக்கிறது. அதேநேரம் மற்றவை திட்டமிடப்பட்ட மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலையானது தொடர்ந்து 2-வது ஆண்டாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.